உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பகுதியில் நேற்று திருமண விருந்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விருந்தினர்கள் பலரும் கலந்துகொண்டனர். அப்போது அங்கு சிறுத்தைப்புலி ஒன்று திடீரென நுழைந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த விருந்தினர்கள் அலறி அடித்து அங்கிருந்து தப்பி ஓடினர். அதோடு மணமக்களும் திருமண அரங்கத்தில் இருந்து தப்பி ஓடி காருக்குள் நுழைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், வனத்துறையினரின் உதவியோடு சம்பவப் இடத்திற்கு சென்று பல மணி நேரம் போராடி சிறுத்தைப்புலியை பிடித்தனர்.

அதனை பிடிக்கும் வரை மணமக்களின் குடும்பத்தினர், பாதுகாப்பிற்காக வேனில் தஞ்சமடைந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதுகுறித்து ஆளும் பாஜக அரசை, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் அரசில் காணப்படும் ஊழலால் வனத்தில் மனித ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார். இது வருத்தம் தருவதாகவும், இதனால் பொதுமக்களின் வாழ்வு ஆபத்தில் உள்ளதாகவும் கூறினார். இது பற்றி ஏதேனும் நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது அது சிறுத்தைப்புலியே இல்லை, அது ஒரு பெரிய அளவிலான பூனை என்று கூறி அதை மறைத்து விடுவார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.