
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக கங்கா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த குழந்தை ஒரு தனியார் பள்ளியில் படித்து வரும் நிலையில் மோகனுடன் வேலை பார்க்கும் ஒருவருக்கும் கங்காவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி மோகன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக கங்கா தன் கணவரை பிரிந்து சென்று விட்டார். இவர்கள் இருவரும் தனித்தனியாக வசித்து வரும் நிலையில் மோகன் அடிக்கடி கங்கா வீட்டிற்கு சென்று தன் மகளை பார்த்துள்ளார். அந்த வகையில் நேற்று முன்தினம் மோகன் தன் மகளை பார்ப்பதற்காக சென்றார். அப்போது கங்கா குழந்தையை காட்ட முடியாது என்று தகராறு செய்துள்ளார்.
இதனால் மோகன் தன் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி நேற்று தன் மகளை ஸ்கூட்டியில் பள்ளியில் விட்டுவிட்டு கங்கா வீட்டிற்கு திரும்பிய போது அவரை மோகன் வழிமறித்து தகராறு செய்துள்ளார். பின்னர் தான் வைத்திருந்த கத்தியால் கங்காவின் வயிற்றில் 7 முறை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கங்காவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மோகனை கைது செய்துள்ளனர். காதல் திருமணம் கொண்ட நிலையில் மனைவியை கணவர் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு சென்று விட்டார். தற்போது தாயும் இல்லாமல் தந்தையும் இல்லாமல் பெண் குழந்தை பரிதவிப்பில் இருப்பது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.