
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் நிலையில் சீமான் ஈரோட்டில் பொதுக்கூட்டத்தில் பிரபாகரன் மகன் கொலைக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, பிரபாகரனை தீவிரவாதி என்று சொன்னது திராவிடம். இலங்கையில் போரை நிறுத்தி பிரபாகரன் உள்ளிட்டவர்களை காப்பாற்ற வேண்டும் என்று அமெரிக்கா விரும்பியது. ஆனால் காங்கிரஸ் குடும்பமும் தமிழக தலைவர்களும் அதனை விரும்பவில்லை. பிரபாகரன் உயிருடன் இருந்தால் அவர்களுடைய அரசியலுக்கு ஆபத்து என்று நினைத்தனர். இலங்கைப் போரை விரைந்து முடிக்க வேண்டும் என்று முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி சிவசங்கரமேனன் கடிதம் எழுதியுள்ளார்.
அவர்கள் பிரபாகரன் இருப்பது இந்திய அரசியலுக்கு எதிராக இருக்கும் என்று எண்ணினார்கள். 13 கோடி தமிழ் சொந்தங்கள் இருக்கும்போது தான் பாலச்சந்திரன் இசை பிரியாவுக்கு கொடூரம் நடந்தது. பிரபாகரனின் மகன் ராணுவ கட்டுப்பாட்டில் இருந்தது தமிழக மற்றும் இந்திய தலைவர்களுக்கு சொல்லப்பட்ட சிலையில் பிரபாகரனின் குடும்பத்தில் ஒருவர் கூட இருக்கக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. அதனால்தான் பிரபாகரனின் மகனை கொலை செய்தார்கள். இதை மறந்து கடந்து போக முடியுமா. இதற்கு காரணமானவர்களை வஞ்சம் வைத்து கருவறுக்காமல் விடமாட்டேன். பேரரசு சாம்ராஜ்யங்களே வீழ்ந்த நிலையில் உங்களை வீழ்த்துவது எம்மாத்திரம். நீங்க வீழ்ந்து விட்டதால்தான் தற்போது காசு கொடுத்து ஓட்டு கேட்கிறீர்கள். மேலும் ஜாதி பார்க்காமல் நாம் தமிழர் கட்சியில் இணைத்துள்ள நிலையில் நான் யாருக்காக எதற்காக பேசுகிறேன் என்பது அனைவருக்கும் தெரியும் என்று கூறினார்.