காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கடம்பரை கோவில் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பத்மா(55). இந்த தம்பதிக்கு சுதா, கலைச்செல்வி என்ற மகள்கள் இருக்கின்றனர். இருவரும் திருமணம் முடிந்து சென்னையில் வசிக்கின்றனர். இந்த நிலையில் சுதாவின் மகன் தீபக் குமார்(16) கலைச்செல்வியின் மகள் வினிஷா(9) ஆகிய இருவரும் விடுமுறையில் பாட்டி வீட்டிற்கு வந்தனர். இந்த நிலையில் பத்மா தனது பேரப்பிள்ளைகளுடன் வேங்கசேரி தடுப்பணைக்கு குளிக்க சென்றார்.

இந்த நிலையில் குளித்துக் கொண்டிருந்தபோது குழந்தைகள் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பத்மா தனது பேரப்பிள்ளைகளைக் காப்பாற்ற முயன்றார். ஆனால் அவர்கள் மணலில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்த அறிந்த தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு பத்மா, தீபக் குமார், வினிஷா ஆகியோரின் உடல்களை மீட்டனர். பின்னர் அவர்களது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.