திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் வெங்கடாசலபுரம் கிருஷ்ணன் கோவில் தெருவில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகன்கள் இருந்துள்ளனர். அதில் இளைய மகன் உலகநாதன் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். உலகநாதன் தனது வீட்டில் பாசமாக ஒரு ஆடு வளர்த்து வந்தார். இந்த நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்பாக சுப்பையா அந்த ஆட்டை விற்பனை செய்ததால் உலகநாதன் மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் பள்ளிக்கூடத்திற்கு செல்ல மாட்டேன் என அடம் பிடித்த மகனை சிவனியம்மாள் கண்டித்துள்ளார்.

ஆட்டுக்குட்டிக்காக வருத்தப்படாமல் பள்ளிக்கு சென்று நன்றாக படி என அறிவுரை கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து சிறுவன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தான். இதனையடுத்து வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த சிவனியம்மாள் தனது மகன் மயங்கி கிடந்ததை பார்த்து உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட உலகநாதன் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு நேரம் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.