
தெலுங்கானா மாநிலம் நரசிம்மா நகரில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கும், அப்குடாவில் வசிக்கும் சிந்து என்கின்ற விக்னேஷ் (22) என்பவருக்கும் இன்ஸ்டாகிராமில் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. விக்னேஷ் அந்த சிறுமியிடம் தான் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமி திருமணம் செய்து கொள்வதற்காக தனது வீட்டில் இருந்து கடந்த மாதம் 20ம் தேதி வெளியேறினார். அப்போது விக்னேஷ் தனது நண்பரான சாகித் வீட்டில் அந்த சிறுமியை தங்க வைத்துள்ளார். அங்கு வைத்து விக்னேஷ் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் சிறுமிக்கு, விக்னேஷ் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதனால் சிறுமி விக்னேஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இல்லை என்றால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் சிறுமியை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக விக்னேஷ் தனது நண்பனிடம் உதவி கேட்டபோது, அவர் மறுத்து விட்டார். அதன்பின் விக்னேஷ் அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தனது நண்பன் வீட்டில் இல்லாத சமயத்தில் அந்தச் சிறுமியை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த நண்பனின் மனைவி, சிறுமி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து தனது கணவனுக்கு தொடர்பு கொண்டு கூறினார். இதையடுத்து நண்பர்களின் உதவியோடு அந்தச் சிறுமியின் உடலை குப்பையில் வீசினர். இதற்கிடையில் தனது மகள் காணாமல் போனதாக அந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் குப்பைக்குள் அழுகிய நிலையில் கிடந்த சிறுமியின் உடலை மீட்டனர். அதோடு இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விக்னேஷ் சாகித் மற்றும் கல்யாண் ஆகியோரை கைது செய்தனர்.