பெலகாவி ஆஞ்சநேய நகரை சேர்ந்த சந்தோஷ் (47) என்பவர், அவரது மனைவி உமா (42) மற்றும் மகள் சஞ்சனா (18) ஆகியோர் வாழ்க்கையில் நிகழ்ந்த கொடூரக் கொலை சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த அக்டோபர் 9ஆம் தேதி, சந்தோஷ் மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியிடப்பட்டது. இறுதி சடங்குகள் நடைபெற்ற பின்னரும், அவரது மகள் சஞ்சனாவுக்கு தந்தையின் மரணம் குறித்து சந்தேகம் ஏற்பட்டது.

சஞ்சனா தனது வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்க்க முயன்றபோது, அவற்றை அவரது தாய் உமா அழித்தது தெரியவந்தது. இது சஞ்சனாவின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது. அதனால், சஞ்சனா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸார் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் அக்கம் பக்க சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இந்தக் காணொளியில் உமா, மற்றொரு ஆணுடன் இரவு நேரத்தில் பைக்கில் பயணம் செய்த காட்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன. விசாரணையின் போது, மங்களூரை சேர்ந்த ஷோபித் என்ற ஆணுடன் உமா சமூக ஊடகத்தின் மூலம் பழகி, கள்ளக்காதல் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. இது சந்தோஷிற்கு தெரிந்தபோது, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

தன் கள்ளக்காதலை தொடர வேண்டும் என்பதற்காக, உமா, ஷோபித் மற்றும் அவரது நண்பருடன் இணைந்து சந்தோஷை கொல்ல திட்டமிட்டார். தூக்க மாத்திரைகளை கொடுத்து, அவரது கணவர் தூங்கியபின், மூவரும் சேர்ந்து தலையணையால் அமுக்கி கொலை செய்தனர். பிறகு, இந்த கொலைகளை மறைக்க மாரடைப்பு நாடகம் நடத்தினர்.

எனினும்,  சிசிடிவி காட்சிகள் மூலம் இந்த கொலை குறித்து  போலீஸார் கண்டுபிடித்து, உமாவை கைது செய்தனர்.