டெல்லியின் வசந்த் குன்ஞ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், பூட்டிய வீட்டுக்குள் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்தே அக்கம் பக்கத்தினர் போலீஸில் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்தபோது, 46 வயதான ஹீராலால் சர்மா மற்றும் அவரது 4 மகள்களின் சடலங்கள் உள்ளே கிடந்தது.

அந்த வீட்டில் இருந்த ஹீராலால் சர்மா மற்றும் அவரது மகள்கள் நீத்து (26), நிக்கி (24), நீரு (23), நிதி (20) ஆகியோர் உயிரிழந்த நிலையில் இருந்தனர். சடலங்கள் அருகே தூக்க மாத்திரை கிடந்ததாகவும் கூறப்படுகிறது. விசாரணையில், அவர்கள் செப்டம்பர் 24ஆம் தேதி வீட்டுக்குள் சென்ற பிறகு வெளியே வரவில்லை என்பதும், இது சிசிடிவி காட்சிகளின் மூலம் தெரியவந்தது. ஹீராலால் சர்மாவின் மனைவி கடந்த ஆண்டு இறந்திருந்ததால், அவரது மன நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

ஹீராலால் சர்மா, தனது மனைவி இறப்பு மற்றும் மகள்களின் சுகாதார சிக்கல்கள் காரணமாக மன உளைச்சலில் இருந்து, மகள்களையும் கொன்று, தானும் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பெண்களின் கைகளிலும் கழுத்திலும் சிவப்பு நாடா பிணைக்கப்பட்டிருந்ததால் இந்தத் தற்கொலை பற்றிய சந்தேகங்கள் மேலும் வலுப்பெற்றுள்ளன. இருப்பினும், சம்பவத்தின் முழு உண்மை பிரேத பரிசோதனை முடிவுகளின் பின்னரே தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.