
தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில், அவருடைய கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியது. இதைத்தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடத்த இருக்கிறார். நடிகர் விஜய் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பெரியார் திடலுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார். இதன் மூலம் தமிழக அரசியல் களத்திற்குள் நேரடியாக விஜய் நுழைந்துள்ளார். இந்நிலையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததற்கான காரணம் குறித்து தற்போது பரபரப்புக்கு தகவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததற்கு காரணமே உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான்.
உதயநிதி ஸ்டாலின் ஒட்டுமொத்த சினிமாவையும் ஆக்கிரமித்துள்ளார். அவரிடமிருந்து திரைத்துறையை மீட்க வேண்டும் என்பதற்காகத்தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அதோடு விஜய் மது ஒழிப்பு கொள்கையை கொண்டு வர விரும்புகிறார். விஜய் 2026 தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றால் அவருடைய முதல் கையெழுத்து மது ஒழிப்பாகத்தான் இருக்கும். இதன் காரணமாகத்தான் முதல்வர் ஸ்டாலின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மூலம் மது ஒழிப்பு மாநாட்டை நடத்த இருக்கிறார். மேலும் விஜய் முதல்வராக பதவியேற்கும் போது மது ஒழிப்பை அமல்படுத்துவார் என்பதை உளவுத்துறை மூலமாக முதல்வர் ஸ்டாலின் தெரிந்து கொண்டுதான் தற்போது மது ஒழிப்பு மாநாட்டுக்கு விசிகவை தூண்டி விட்டதாக மணிகண்டன் கூறியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.