
சென்னையில் “கலைஞர் எனும் தாய்” என்ற புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு நடிகர் ரஜினி பேசி உள்ளார். அதில் அவர் ” திமுகவில் பழைய மாணவர்கள் ஏராளம். அமைச்சர் துரைமுருகன் போன்றவர்களை சமாளிப்பது எளிதான காரியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார் அவர் கருணாநிதி கண்ணுலையே விரல் விட்டு ஆட்டியவர் என்றும் அவரை போன்றவர்களை சமாளிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தலை வணங்குகிறேன் என்றும் அவர் பேசியுள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் துரைமுருகனிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ” மூத்த நடிகர்கள் எல்லாம் வயதாகி பல் விழுந்து தாடி வளர்த்து சாகிற நிலையில் கூட நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்றும் இதையெல்லாம் மறந்துவிட்டு ரஜினிகாந்த் ஏதோ ஒன்றை பேசுவதாகவும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தற்போது துரைமுருகன் தான் பேசியதுக்கு விளக்கம் தெரிவித்துள்ளார். அதில் “என்னுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக மாற்ற வேண்டாம் எனவும் நாங்கள் எப்போதும் நண்பர்களாகவே இருப்போம்” எனவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் துரைமுருகன் பேசியது தனக்கு வருத்தம் இல்லை என கூறியதும் குறிப்பிடத்தக்கது.