
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜோராவாடி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கன மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக அந்த பகுதி முழுவதுமே வெள்ளக்காடாக மாறியது. இதனால் அப்பகுதி மக்கள் யாரும் வெளியே செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் அக்கிராமத்தில் ரவீணா உய்கே என்ற பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் அவர்களது குடும்பத்தினர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். ஆனால் ஊரை சுற்றி வெள்ளமாக இருந்ததால் அவர்களால் மருத்துவமனையை நோக்கி செல்ல முடியவில்லை.
எனவே மாவட்ட சுகாதார அதிகாரியான பெண் டாக்டர் மனிஷா சிர்சாமிடம் தங்களது நிலை குறித்து ரவீணாவின் கணவர் தெரிவித்தார். அதன்படி டாக்டர் சிர்சாம் மருத்துவ குழுவினருடன் கிராமத்திற்கு சென்றார். ஆனால் அவர்களால் ஊருக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் டாக்டர் சிர்சாம், ரவீணாவின் கணவரிடம் அந்த கிராமத்தில் உள்ள நர்சை உங்கள் வீட்டிற்கு வரவழைத்து வாருங்கள் என்று கூறினார். இதைத் தொடர்ந்து அந்த கிராமத்தில் நர்சாக இருந்த ரேஷ்னா வன்ஷ்கர் ரவீனாவின் வீட்டிற்கு வந்தார். ரேஷ்னாவிடம் மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு தான் சொல்லும் வழிமுறைகளை கடைபிடித்து ரவீனாவுக்கு பிரசவம் பார்க்கும்படி கூறினார்.
அதன்படி நர்ஸ் ரேஷ்னா வன்ஷ்கர் ரவீனாவுக்கு பிரசவம் பார்த்தார். இறுதியில் ரவீனாவுக்கு இரண்டு அழகான குழந்தைகள் பிறந்தது. இதையடுத்து மறுநாள் ஊரை சுற்றியுள்ள வெள்ளம் வடிந்ததும் ரவீனாவும் , இரட்டை குழந்தைகளும் மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதன் பின் அங்குள்ள மருத்துவர்கள் தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர் என்று கூறினர். இந்த சம்பவம் நடிகர் விஜய் நடித்த நண்பன் படத்தில் வரும் காட்சியைப் போல இருந்தது. டாக்டர் வழங்கும் ஆலோசனையின் மூலம் நடிகர் விஜய்யும் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்து தாயையும் குழந்தையையும் காப்பாற்றும் சினிமா காட்சியை நினைவு படுத்தும் இந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.