
பெரம்பலூர் மாவட்டத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் முத்துநகர் பகுதியில் வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். இதில் ஒரு வீட்டின் மாடியில் கடந்த ஒரு வருடமாக ஆனந்தியும் (60), அவருடைய மகன் ஸ்ரீராம் குமாரும் (34) வசித்து வந்துள்ளனர். இவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்களுடைய வீட்டில் நேற்று காலை திடீரென துர்நாற்றம் வீசியுள்ளது. இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் பெரம்பலூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற நிலையில் அவர்கள் வீட்டின் கதவை உடைத்துப் பார்த்தனர்.
அப்போது ஆனந்தியின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. அதன்பின் படுக்கையறையில் ஸ்ரீராம் குமார் தூக்கில் பிணமாக தொங்கினார். இதில் ஆனந்தியின் உடலின் மேல் ஒரு துணி போர்த்தப்பட்டிருந்தது. அதோடு உடலை சுற்றி எலுமிச்சை பழம் மற்றும் குங்குமம் போன்ற மாந்திரீகம் செய்யும் பொருட்கள் இருந்தது. இதனால் ஸ்ரீராம் குமார் தன் தாயை மாந்திரீகம் செய்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது ஆனந்தி இறந்த பிறகு அவருக்கு வீட்டிலேயே இறுதி சடங்கு செய்துவிட்டு வெளியே சொல்லாமல் தற்கொலை செய்து கொண்டாரா என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.