சேலம் மாவட்டத்தில் உள்ள களரம்பட்டி பகுதியில் மாது என்பவர் வசித்து வருகிறார். இவர் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கரும்பு ஜுஸ் கடைக்கு சேலம் செவ்வாபேட்டை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஜூஸ் குடிக்க சென்றுள்ளார். அவர் தனது மகள் கனிஷ்காவையும் உடன் அழைத்து சென்றுள்ளார். இந்த நிலையில் கனிஷ்கா கரும்பு பிழியும் எந்திரம் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக சிறுமியின் கை கரும்பு பிழியும் எந்திரத்தில் சிக்கிக்கொண்டது. உடனே வலியில் சிறுமி அலறி துடித்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுரேஷ் படுகாயமடைந்த மகளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எந்திரங்கள் இருக்கும் பகுதிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.