பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. ஜேயூஐஎப் அமைப்பு சார்பாக நடந்த இந்த அரசியல் கூட்டத்தில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் முதற்கட்டமாக 35 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு மேற்பட்டதாகவும் படுகாயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 17 ஆகவும் உள்ளது.

காயமடைந்தவர்கள் பெஷாவர் மற்றும் டைமர்கெரா பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இது தற்கொலை படை தாக்குதல் என்று தெரிவித்துள்ள நிலையில் இதுவரை எந்த அமைப்பும் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை. மேலும் இச்சம்பவத்திற்கு பிரதமர் ஷபாஸ் ஷெரிப் கண்டனம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.