ஐபிஎல் 2026 தொடரின் 2-வது தகுதிச் சுற்று (Qualifier 2) போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேறியது.

இந்தத் தோல்வியால் ராஜஸ்தான் அணியின் 15 வயதே ஆன இளம் அதிரடி பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்சி முற்றிலும் மனமுடைந்து, மைதானத்திலேயே தனது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதார்.

இந்த நடப்பு சீசனில் 16 போட்டிகளில் விளையாடி 776 ரன்கள் குவித்து பல சாதனைகளைத் தகர்த்த வைபவ், இந்த முக்கியமான போட்டியிலும் முகமது சிராஜ், ககிசோ ரபாடா போன்ற உலகத்தரம் வாய்ந்த பவுலர்களின் பவுன்சர் சவால்களை எதிர்கொண்டு 47 பந்துகளில் 96 ரன்கள் குவித்து அணியைத் தாங்கிப் பிடித்தார்.

இவ்வளவு போராடியும் அணி தோற்றுவிட்டதே என்ற ஏக்கத்தில் அழுத அந்தச் சிறுவனின் நிலையைப் பார்த்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய உரிமையாளரான பிரபல தொழிலதிபர் லட்சுமி நிவாஸ் மிட்டல், உடனடியாக மைதானத்திற்குள் ஓடிவந்து வைபவை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார்.

அப்போது அந்த இளம் வீரர் மிட்டலின் காலில் விழுந்து ஆசி பெற்றார். ஒரு அணியின் முதலாளி மைதானத்திற்குள் வந்து இளம் வீரரைத் தேற்றிய இந்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.