நடிகர் சங்க கட்டிடம் கட்ட வங்கியில் 30 கோடி கடன் கேட்டு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.

சென்ற 2016ம் வருடம் நடிகர் சங்கத்துக்கு சென்னை தியாகராய நகரில் இருக்கும் சாலையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்து கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. அங்கு திரையரங்கம், திருமண மண்டபம், நடிகர் சங்க அலுவலகங்கள், உடற்பயிற்சி கட்டிடம், நடிப்பு பயிற்சி மையம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வந்த நிலையில் 70 சதவீத பணிகள் முடிவடைந்தது.

சென்ற 2019 நடைபெற்ற நடிகர் சங்க தேர்தல் ஓட்டு எண்ணிக்கையை நீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் கட்டுமான பணிகளும் நிறுத்தப்பட்டது. இதன்பின் தடை நீக்கப்பட்டு சென்ற மார்ச் மாதம் ஓட்டுகள் எண்ணப்பட்டு நாசர் தலைமையிலான நிர்வாகிகள் பொறுப்பு ஏற்றார்கள். இதன்பின் மீண்டும் சங்க கட்டிடத்தை கட்ட முயற்சி எடுத்தார்கள். ஆனால் போதுமான அளவு நிதி இருப்பு இல்லாத காரணத்தினால் பணிகளை ஆரம்பிக்க முடியவில்லை.

இந்த நிலையில் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்டோர் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக வங்கியில் 30 கோடி ரூபாய் கடன் கேட்டு ஆவணங்களை சமர்ப்பித்திருக்கின்றார்கள். இதற்கான கடன் ஓரிரு வாரங்களில் கிடைக்கும் எனவும் ஜனவரி இறுதியில் பணிகள் தொடங்கப்பட்டு ஆறு மாதத்தில் முடித்து திறப்பு விழா நடத்தப்படும் என நடிகர் சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.