மதுரை மாவட்டத்திலுள்ள விளாங்குடி பொற்றாமரை நகர் பகுதியில் விஸ்வமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இரண்டு மகள்களுடன் மதுரை அரசடி மின்சார அலுவலகத்திற்கு வந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்களது கையில் மின்சாரம் கிடைக்கும் வரை போராடுவோம் என எழுதப்பட்ட பதாகைகள் இருந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் விஸ்வமூர்த்தி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்களது வீட்டிற்கு மின்சார இணைப்பு கேட்டு 9 மாதங்களுக்கு முன்பு பணம் செலுத்தினோம்.

ஆனால் இன்று வரை மின் இணைப்பு கொடுக்கவில்லை. வீட்டிற்கு அருகே விஷப்பூச்சி அதிகமாக இருக்கிறது. இதனால் எனது மகள்கள் படிப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இரவில் கொசுக்கடி அதிகமாக இருப்பதால் சரியாக தூங்க முடியாமல், பகலில் பள்ளியில் பாடத்தை கவனிக்க முடியாமல் எனது மகள்கள் சிரமப்படுகின்றனர். எனவே வீட்டிற்கு உடனடியாக மின் இணைப்பு தர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மின்சார துறை உயர் அதிகாரி கூறியதாவது, அந்த சிறுமிகளின் போராட்டம் எங்களது கவனத்திற்கு வந்தவுடன் பிரச்சனை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதாவது அவர்களது வீட்டிற்கு அடுத்தவர்கள் இடத்தின் வழியாக மின் வயர் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இதனால் தான் அவர்களது வீட்டிற்கு மின் இணைப்பு கொடுக்க முடியவில்லை. தற்போது அருகே இருக்கும் இடத்துக்காரர் சம்மாத கடிதம் தருவதற்கு ஒப்பு கொண்டதால் விரைவில் மின் இணைப்பு வழங்கப்படும் என கூறினார்.