கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் தோட்டக்கலை கல்லூரி பண்ணை அருகே பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் விருதகிரி குப்பத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் பணியில் இருந்துள்ளார். அப்போது புத்தாண்டை கொண்டாடிவிட்டு திரு.வி.க நகரை சேர்ந்த அப்துல் ஹமீது, வசந்த், சித்திக் அலி ஆகிய மூன்று பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளனர். அவர்கள் 100 ரூபாய்க்கு பெட்ரோல் கேட்டதால் ஜெயராஜ் பெட்ரோல் போட்டுள்ளார். அதற்கான பணத்தை வாலிபர்கள் ஆன்லைன் மூலமாக செலுத்தியுள்ளனர்.

ஆனால் பணம் ஏறாததால் ஜெயராஜ் இது குறித்து அவர்களிடம் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த 3 பேரும் ஜெயராஜ் மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அப்துல் ஹமீது, வசந்த், சித்திக் அலி ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். இதற்கிடையே வாலிபர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கிய சிசிடிவி காட்சிகள் சமூக விடுதலத்தில் வேகமாக பரவி வருகிறது.