
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டை பகுதியில் வசிக்கும் சுந்தர் கோச்சா (42) மற்றும் அவரது மனைவி பிலா கோச்சா (36) தம்பதியர், தங்களின் 5 வயது மகன் கணேஷுடன் வாழ்ந்து வருகின்றனர். அருகிலுள்ள மில் ஒன்றில் தம்பதியர் வேலை செய்து வருகிறார்கள்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, கணேஷ் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென காணாமல் போனார். இதுகுறித்து, கணேஷின் தாய் பிலா கோச்சா, பல்லடம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்படி போலீசார், கணேஷை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் காலை, வீட்டுக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் கணேஷின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. உடலில் எவ்வித காயங்களும் இல்லாத நிலையில், சிறுவன் இறந்திருந்தார். இதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது விஷ ஜந்துக்களின் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.