கடலூர் மாவட்டத்தில் உள்ள தோட்டப்பட்டு கிராமத்தில் செந்தில்நாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை செந்தில்நாதன் கல்லூரிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கடலூர்- நெல்லிக்குப்பம் சாலையில் சென்ற போது செந்தில்நாதன் ஓட்டி சென்ற கார் மீது கடலூர் நோக்கி சென்ற மற்றொரு கார் மோதியது. மேலும் குணமங்கலம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மீதும் கார் மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆறுமுகம், அவரது மனைவி ஞான சௌந்தரி, செந்தில்நாதன் ஆகிய மூன்று பேரும் காயமடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் காயமடைந்த 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.