சென்னை, வண்டலூர் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இங்கு உள்ள விலங்குகளை பார்ப்பதோடு மட்டுமின்றி விலங்குகளை தத்தெடுக்கும் திட்டத்தையும் இப்பூங்கா நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் வாயிலாக விலங்குகளை தத்தெடுப்பவர்கள், அந்த விலங்குகளுக்குரிய உணவு மற்றும் பராமரிப்பு செலவை அளிக்கலாம்.

இப்படி செலவிடும் தொகைக்கு வரி விலக்கும் அளிக்கப்படுகிறது. அதோடு பூங்காவை இலவசமாக சுற்றிப் பார்த்தல் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பூங்காவிலுள்ள ஷேரு எனும் 3 வயது ஆண் சிங்கத்தை 6 மாதத்திற்கு தத்தெடுத்து உள்ளார். இதற்கு முன்பாக சிவகார்த்திகேயன் யானை, புலி போன்றவற்றை தத்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.