
ஆந்திரா முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, அதிக குழந்தைகளை பெற்றவர்களுக்கு தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்படும் என்று கூறினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தம்பதிகளிடம் இப்போது குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் எண்ணம் குறைந்து வருகிறது. இரண்டு குழந்தைகள் பெற்றால் அவர்கள் வளர்க்க அதிக பணம் தேவைப்படும் என்று நினைக்கின்றனர். உங்கள் பெற்றோர்கள் இப்படி நினைத்திருந்தால் நீங்கள் பிறந்திருக்க முடியுமா. அவர்கள் அதிக குழந்தைகளைப் பெற்று வளர்க்கவில்லையா. குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் மக்கள் தொகை வீழ்ச்சி அடைந்துள்ளது. தென் கொரியா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் இதுபோன்ற மக்கள் தொகை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
அதைப் போன்று இந்தியாவும் சந்திக்க வேண்டாம். ஒரு காலத்தில் அதிக குழந்தைகள் பெற்றவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இப்போது அதை மாற்ற வேண்டும் அதிக குழந்தைகள் பெற்றவர்கள் தான் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்றார். குழந்தை பிறப்பு அதிகரிப்பை ஊக்குவிக்கும் வகையில் இந்த விதமான கொள்கையில் மாற்றம் கொண்டுவர இருக்கிறேன். குழந்தை பிறப்பு குறைந்து கொண்டே சென்றால், 2047 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதிக அளவில் முதியோர்களே இருப்பார்கள். இளைஞர்களை பார்க்கவே முடியாது. எனவே ஒவ்வொரு பெண்ணும் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றால் மக்கள் தொகை அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.