உத்தரப் பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில், பெண் காவலர் ஒருவரின் வாடகை வீட்டிற்கு போன தன்னுடைய போலீஸ்காரர் கணவனை, அவரது மனைவி உறவினர்களுடன் சென்று நள்ளிரவில் கச்சிதமாகப் பிடித்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச காவல்துறையில் பணியாற்றும் இவர்களுக்கு ஒன்றாகப் பணியாற்றியபோது இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே துறை ரீதியான புகார்கள் எழுந்து, ஆண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், பெண் காவலர் எச்சரிக்கப்பட்டு கடந்த ஜூன் 23 அன்று ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த ஆண் காவலருக்குத் திருமணமாகி 3 மாத பெண் குழந்தை உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பெண் காவலருக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் ஆகி, ஒருவர் இறந்துவிட்டதாகவும், மற்றொருவருடன் விவாகரத்து வழக்கு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 

ஹமிர்பூரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்த அந்தப் பெண் காவலர், அக்கம் பக்கத்தினரிடம் இந்த ஆண் காவலரைத் தனது கணவர் என்று அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், கடந்த ஜூலை 3-ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில், தனது கணவர் அந்தப் பெண் காவலரின் வீட்டில் இருக்கும் ரகசியத் தகவலை அறிந்த மனைவி, தனது அக்கா மற்றும் உறவினர்களுடன் உள்ளூர் போலீசாரையும் கூட்டிக்கொண்டு அந்த வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு இருவரும் தனி அறையில் ஒன்றாக இருந்ததைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்த மனைவி, ஆத்திரத்தில் தனது கணவரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். அங்கிருந்த போலீசார் உடனடியாகத் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து, அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எப்.ஐ.ஆர் எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில், சம்பந்தப்பட்ட பெண் காவலர் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கான்ஸ்டபிளின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.