பொதுவாக 10 வயது சிறுவர்கள் மிதிவண்டி ஓட்டுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், முதல் வகுப்பு பயிலும் 10 வயது சிறுவன் ஒருவன், கார் ஓட்டிச் சென்று கடையில் பொருட்கள் வாங்கிய வினோத மற்றும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ‘நானோ’ காரில் இருந்து இறங்கி வந்த அந்தச் சிறுவன், கடையில் தின்பண்டங்களை வாங்கிக் கொண்டு மீண்டும் காரை நோக்கிச் சென்றார்.
View this post on Instagram
இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் வியப்புடன் அந்தச் சிறுவனிடம் பேச்சுக் கொடுத்தனர். அப்போது அவர் தனது பெயர் மற்றும் விவரங்களைக் கூறியதுடன், தான் தான் காரை ஓட்டி வந்ததாகவும், தான் ஒன்றாம் வகுப்பு படிப்பதாகவும் நிதானமாகக் கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சிறுவன் காரைத் திறக்கச் சென்றபோது, அவர் காரின் உள்ளே யாரிடமாவது மடியில் அமர்ந்து ஓட்டுகிறாரா என்று அங்கிருந்தவர்கள் உற்று நோக்கினர். ஆனால் அவர் தனியாகவே டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்து, மிகவும் தன்னம்பிக்கையுடன் ஓட்டிச் சென்றார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, உரிமம் இல்லாத சிறுவனிடம் காரைக் கொடுத்த பெற்றோரின் பொறுப்பற்ற செயலுக்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
போக்குவரத்து விதிகளை மீறியதற்காகவும், சிறுவனின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாததற்காகவும் பெற்றோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஒரு சில பயனர்கள் இதனை வேடிக்கையாகப் பார்த்தாலும், பெரும்பாலானோர் இது பெரும் விபத்திற்கு வழிவகுக்கும் ஆபத்தான செயல் என்று எச்சரித்துள்ளனர்.
