கர்நாடக மாநிலத்தில் ஓடும் ரயிலில் சக பயணிகளின் பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல் திமிராகச் சிகரெட் பிடித்த ஒரு நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலின் உள்ளே அமர்ந்துகொண்டு அந்த நபர் புகைபிடித்தபோது, சக பயணிகள் புகை மூட்டத்தினால் ஏற்படும் அசௌகரியம் மற்றும் தீ விபத்து அபாயம் குறித்து அவரிடம் தட்டிக் கேட்டுள்ளனர்.

அதற்கு அந்த நபர் துளியும் வருத்தப்படாமல், “நான் ஒரு ரயில்வே ஊழியர், உன்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்துகொள்” என்று மிகவும் ஆணவத்துடன் பதிலளித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான 17 வினாடி வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே உதவி மையம் உடனடியாகப் பதிலளித்துள்ளது. புகார் அளித்தவரிடம் ரயிலின் எண் மற்றும் பயணச் சீட்டு விவரங்களைக் கேட்டுள்ள ரயில்வே நிர்வாகம், அந்த நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளது. பெங்களூரு காவல்துறையினரும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

 

ரயில்வே ஊழியர் என்று கூறிக்கொண்டு பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்பட்ட அந்த நபரின் செயல், தற்போது நாடு முழுவதும் உள்ள ரயில் பயணிகளிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது.