ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் பகுதியில் ரப்பிடோ செயலியில் முன்பதிவு செய்யப்பட்ட வாடகைக் காரில் பயணித்த பத்திரிகையாளர் ஒருவர், ஓட்டுநரால் இரும்புத் தடியால் தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘ஸ்க்ரோல்’ செய்தி நிறுவனத்தின் அரசியல் எடிட்டரான சோயிப் தானியால் என்பவர் இச்சம்பவம் குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

பயணத்தின் போது ஓட்டுநர் ஒரு கையால் செல்போனைப் பிடித்துப் பேசிக்கொண்டு ஆபத்தான முறையில் காரை ஓட்டியதாகவும், பாதுகாப்பு கருதி இரண்டு கைகளையும் ஸ்டீயரிங்கில் வைக்கும்படி அறிவுறுத்தியதால் ஆத்திரமடைந்த ஓட்டுநர், காரில் வைத்திருந்த இரும்புத் தடியை எடுத்துத் தன்னைத் தாக்க முயன்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, மகாராஷ்டிராவின் கல்யாண் பகுதியில் பெண் பயணி ஒருவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டு பணத்தைப் பறித்த 19 வயது ரப்பிடோ பைக் ஓட்டுநர் ஒருவரைப் பொதுமக்கள் பிடித்துத் தர்ம அடி கொடுத்துப் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இத்தகைய தொடர் சம்பவங்கள் வாடகை வாகனச் செயலிகளின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ஓட்டுநர்களின் பின்னணி குறித்த நம்பகத்தன்மை மீது பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளன.