பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத இருக்கின்ற மாணவ, மாணவிகள் பெயர் பட்டியலில் இன்று முதல் திருத்தம் மேற்கொள்ளலாம் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தேர்வு துறை இயக்குனர் சா.சேதுராம வர்மா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, நடப்பு கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வு வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்வை எழுத உள்ள மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியல் தேர்வு துறை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் கடந்த 17-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவ, மாணவிகளின் விவரங்களில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டி இருந்தால் அதனை சரி செய்து கொள்வதற்கு தற்போது இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் இன்று முதல் பிப்ரவரி 25-ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் எமிஸ் தளம் வழியாக பட்டியல் தேர்வு திருத்தங்களை மேற்கொள்ளலாம். தலைமை ஆசிரியர் இந்த பணிகளை உரிய வழிமுறைகளுடன் பின்பற்றி கூடுதல் கவனத்துடன் செய்து முடிக்குமாறு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.