மினசோட்டாவில் நடைபெற்று வரும் ‘ICE’ (Immigration and Customs Enforcement) நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களைப் படமெடுக்கச் சென்ற அமெரிக்கப் பத்திரிகையாளர் நிக் சார்டர் மற்றும் அவரது குழுவினர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மினியாபோலிஸின் சிடார் ரிவர்சைடு பகுதியில் நிக் சார்டரின் $1,000 மதிப்புள்ள கேமராவை மர்ம நபர்கள் பறித்துச் சென்றதோடு, அதனைத் தடுக்க முயன்ற அவரை ஓடும் காரில் கையை மாட்ட வைத்து சாலையில் இழுத்துச் சென்றுள்ளனர். பனி மூடிய சாலையில் இத்தகைய ஆபத்தான சூழலிலும் அவருக்கு உதவ எவரும் முன்வரவில்லை என்பது வேதனையான விஷயமாகும்.

​சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் பத்திரிகையாளர்களை அங்கிருந்து வெளியேறச் சொல்லி மிரட்டியதுடன், நீண்ட தூரம் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக எஃப்பிஐ (FBI) தற்போது தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. மினசோட்டாவில் சட்டவிரோதக் குடியேற்றம் மற்றும் சில மோசடிப் புகார்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் தீவிர நடவடிக்கைகளால் அங்குள்ள உள்ளூர் மக்களிடையே ஏற்பட்டுள்ள கடும் கோபமே இத்தகைய வன்முறைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.