பீகார் மாநிலம் சிவான் பகுதியில், திருமணத்திற்குத் திட்டமிட்டதை விட இரு மடங்கு நபர்கள் வந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், மாப்பிள்ளை வீட்டாருக்குப் பரிமாறப்பட்ட உணவில் மணமகளின் தந்தை பேதி மாத்திரையைக் கலந்த விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியப் பண்பாட்டில் திருமணம் என்பது இரு குடும்பங்களின் முக்கிய நிகழ்வாகக் கருதப்பட்டாலும், தற்கால ஆடம்பரத் திருமணங்கள் பெண் வீட்டாரிற்குப் பெரும் பொருளாதார சுமையை ஏற்படுத்துகின்றன. இந்தத் திருமணத்தின் போது, மணமகன் தரப்பில் இருந்து 100 பேர் மட்டுமே வருவார்கள் என்று மணமகள் வீட்டாரிடம் கூறப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. ஆனால், திருமணத்தன்று எதிர்பாராத விதமாக 100 பேருக்குப் பதிலாக 200-க்கும் மேற்பட்ட உறவினர்களை மணமகன் அழைத்து வந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Khateeb Hasani (@khateeb__hasani)

இதனால், பெண் வீட்டார் திட்டமிட்டிருந்த உணவு மற்றும் திருமண பட்ஜெட் முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. மாப்பிள்ளை வீட்டாரின் இந்த எதிர்பாராத செயலால் கடும் ஆத்திரமடைந்த மணமகளின் தந்தை, திருமண விருந்தில்   கடுமையான வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக்கூடிய பேதி மருந்தை  கலந்துள்ளார். திருமண பந்தியில் அந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே, மாப்பிள்ளை வீட்டார் அனைவருக்கும் அடுத்தடுத்து கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, அவர்கள் அனைவரும் மண்டபத்தை விட்டு அருகிலிருந்த நதிக்கரையை நோக்கி அவசரமாக ஓடத் தொடங்கியுள்ளனர்.

மண்டபத்தில் ஏற்பட்ட இந்த திடீர் குழப்பத்தை அங்குள்ள சிலர் வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட, அது தற்பொழுது வைரலாகி வருகிறது. மணமகன் வீட்டாரின் அலட்சியப் போக்கும், பெண் வீட்டாரின் இந்த விபரீத நடவடிக்கையும் சமூக வலைதளங்களில் தற்பொழுது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.