திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டு ஊமையன் வட்டம் பகுதியில் மதிமாறன்- அம்பிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுக்கு அதே பகுதியில் 1 ஏக்கர் 10 சென்ட் நிலம் உள்ளது. அதில் 17 சென்ட் இடத்தை அதே பகுதியில் வசிக்கும் சிலர் அபகரித்துள்ளனர். இதுகுறித்து பத்து முறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்று அம்பிகாவிற்கு சொந்தமான நிலத்தை சிலர் டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தனர்.

இதனை தட்டிக்கேட்ட அம்பிகாவின் குடும்பத்தினரை அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றனர். இதனால் மன உளைச்சலில் அம்பிகா ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அம்பிகா மீது தண்ணீரை ஊற்றி அவரை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் பிறகு அம்பிகா அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.