மும்பையின் கோரேகான் மேற்குப் பகுதியில் உள்ள சித்தார்த் நகரில் அமைந்துள்ள ஆதர்ஷ் வித்யாலயா பள்ளி வாசலில், வியாழக்கிழமை (டிசம்பர் 11) காலை 9.40 மணியளவில், ஒரு தெருநாய் திடீரென தாக்கி, பள்ளிக் காவலர் ஒருவரின் தோளில் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சிசிடிவி காட்சிகளில் தெளிவாக பதிவாகி, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சிசிடிவி காட்சிகளில், பள்ளி வாசலின் அருகே காவலர் ஒருவர் சீருடையில் நடந்து செல்வதும், அருகில் ஒரு தெருநாய் அமர்ந்திருப்பதும் தெரிகிறது. இதே சமயம், மற்றொரு நாய் முன்புறத்திலிருந்து நெருங்கி வரும் காட்சியும் உள்ளது. காவலர் வாசலை நோக்கி திரும்பிய தருணத்தில், நாய் திடீரென பாய்ந்து, அவரது இடது தோளில் தாடைகளால் கடித்துக் கொள்கிறது.
அதிர்ச்சியடைந்த காவலர் போராடியபடி, தனது மற்ற கையால் நாயை விரட்டுகிறார். அதைத் தொடர்ந்து நாய் ஓடிவிடுகிறது. இதே சமயம், மற்றொரு காவலர் கையில் நீண்ட குச்சியுடன் ஓடிவருகிறார்.
सिद्धार्थ नगर, गोरेगांव पश्चिम में आवारा कुत्तों का आतंक!
आवारा कुत्तों के हमले से स्थानीय लोग दहशत में हैं। आदर्श विद्यालय स्कूल के पास कुत्ते राहगीरों पर अचानक हमला कर रहे हैं, जिससे कई लोग घायल हुए हैं। सीसीटीवी फुटेज में एक कुत्ते को सिक्योरिटी गार्ड पर हमला करते देखा गया। pic.twitter.com/LoDX1910QV
— Aman Kumar Dube (@Aman_Journo) December 12, 2025
ஆனால், ஆபத்து இங்கேயே முடிவதில்லை. சில விநாடிகள் கழித்து, அதே நாய் மீண்டும் இருவரையும் நோக்கி பாய்கிறது. இதனையடுத்து குச்சியுடன் இருந்த காவலர் தற்காப்புக்காக நாயின் தலையில் அடித்து, தாக்குதலை தடுத்துள்ளார்.
இந்த சம்பவம், மும்பை நகரில் தெருநாய்களின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மத்தியில் மேலும் கவலைகளை உருவாக்கியுள்ளது. சமீப மாதங்களில் நாய் கடி வழக்குகள் கணிசமாக உயர்ந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலும் தெருநாய் பிரச்சனையைத் தொடர்பாக உச்ச நீதிமன்றமும், இந்திய விலங்கு நல வாரியமும் (AWBI) வெளியிட்டுள்ள நிலையான செயல்முறை வழிகாட்டுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல விலங்கு நல ஆர்வலர்கள் டிசம்பர் 14 அன்று மும்பை முழுவதும் ஒரு பெரிய பேரணிக்கு தயாராகி வருகின்றனர்.
