திரைப்படங்களில் வில்லனாக நடித்தாலும், நிஜ வாழ்க்கையில் மக்களின் நாயகனாகத் திகழும் பிரபல நடிகர் சோனு சூத், தற்போது வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட காத்மாண்டு பகுதிக்கு நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கி மீண்டும் ஒருமுறை ரியல் ஹீரோ என்பதை நிரூபித்துள்ளார்.

இயற்கைச் சீற்றத்தால் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மனிதர்களுக்கு ஓடோடிச் சென்று உதவுவதில் எப்போதும் முன்னிற்கும் அவர், வெள்ளப் பெருக்கினால் சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாகியுள்ள நேபாள மக்களுக்கு நேரில் சென்று ஆதரவு அளித்துள்ளது உலகளவில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இயற்கையின் கொடூரத் தாண்டவத்தால் வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவிக்கும் காத்மாண்டு மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசியப் நிவாரணப் பொருட்களை அவரே முன்னின்று வழங்கி வருகிறார்.

மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட சோனு சூத், “இயற்கைச் சீற்றத்தால் முற்றிலும் சிதைந்துபோன மக்களின் வாழ்க்கையை நாம் அனைவரும் இணைந்து மீண்டும் மறுசீரமைப்போம், இழந்த வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவோம்” என்று நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளைக் கூறி அப்பகுதி மக்களின் நெஞ்சங்களில் பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளார்.

கொரோனா பேரிடர் காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குத் தன்னலம் கருதாது உதவி செய்து ஒட்டுமொத்த இந்தியாவின் அன்பையும் பெற்ற சோனு சூத், தற்போது எல்லைகளைக் கடந்து பிற நாட்டு மக்களுக்கும் தனது கருணை கரங்களை நீட்டியுள்ளார்.

வெறும் வார்த்தைகளோடு நிறுத்திவிடாமல், களத்தில் இறங்கி நேரில் உதவி செய்யும் அவரது இந்தச் செயல், இணையதளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது. பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு மறுவாழ்வு தரும் வரை தனது உதவித் திட்டம் தொடரும் என அவர் உறுதி அளித்துள்ளது, பேரிடரில் சிக்கித் தவிக்கும் நேபாள மக்களுக்குப் பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.

“>