குஜராத் மாநிலம் ராஜ்கோட்டின் பாவ்நகர் சாலையில் உள்ள பிரபல ‘தாகர் கிக்’ (Thakar Ghik) ஹோட்டல் சமையலறையில், எதிர்பாராத விதமாக பிரிட்ஜின் கம்ப்ரஸர் (கூல்ண்ட் கேஸ் பாட்டில்) பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறிய விபத்தில், உதயப்பூரைச் சேர்ந்த அரவிந்த் சிங் சிசோடியா (20) என்ற இளம் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். புதன்கிழமை மதியம் 3:20 மணியளவில், கிச்சனில் சுமார் 20 ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.

வெடித்த வேகத்தில் கம்ப்ரஸர் பாட்டில் நேராக காற்றில் பறந்து வந்து அரவிந்தின் தலையில் பலமாகத் தாக்கியதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அதிர்ச்சி காட்சிகள் அங்குள்ள சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகி பார்ப்போரைக் கலங்க வைத்துள்ளது. ​உடனடியாக அவரது சக ஊழியர்கள் அரவிந்தை மீட்டு ராஜ்கோட் சிவில் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்.

உயிரிழந்த அரவிந்தின் தந்தை கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் காலமானார் என்பதும், மூன்று உடன்பிறப்புகளில் மூத்தவரான அரவிந்த், தன் குடும்பத்தின் மொத்த பொருளாதாரச் சுமையையும் தாங்குவதற்காகத்தான் ஒரு மாதத்திற்கு முன்பு இந்த ஹோட்டல் வேலைக்குச் சேர்ந்தார் என்பதும் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து அஜிடெம் போலீஸார் விபத்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், பிரேதப் பரிசோதனைக்குப் பின் அரவிந்தின் உடல் இறுதிச் சடங்கிற்காக அவரது சொந்த ஊரான உதயப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.