கவுதம் மேனன் டைரக்டில் சிம்பு நடிப்பில் வெளியாகிய “வெந்து தணிந்தது காடு” படத்தின் வாயிலாக கதாநாயகியாக அறிமுகமானவர் சித்தி இத்னானி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்து விட்டார். இதையடுத்து ஆர்யாவுக்கு ஜோடியாக இவர் நடித்த “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனிடையே சித்தி இத்னானி அடிக்கடி முதியோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

அதன்படி, இப்போது மனநலம் குன்றிய பள்ளி குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வழங்கி அவர்களுடன் நேரத்தை செலவிட்டுள்ளார் சித்தி இத்னானி. இதுகுறித்த புகைப்படத்தை தன் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள சித்தி இத்னானி, “நீங்கள் ஒருவருக்கு பரிசளிக்கக்கூடிய சிறந்த விஷயம் உங்கள் நேரம். லிட்டில் ஏஞ்சல்ஸில் இருக்கக்கூடிய மனநலம் குன்றிய குழந்தைகளுடன் என் மதியத்தை செலவிட்டேன். அவர்கள் முகத்தில் உள்ள புன்னகை விலைமதிப்பற்றது ஆகும்” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு என்ன மனசுப்பா உங்களுக்கு! என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.