மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை, உரண் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி அதிகாலை நடந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்குமார் ராம்ஷிரோமணி சாஹு (35) என்ற நபர், தனது மனைவி ஜக்ராணி (32) மீது கள்ளக்காதல் சந்தேகம் கொண்டு, கை, கால்களை கட்டி, கெரோசின் ஊற்றி தீ வைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதிலும், மருத்துவர் அவர் உயிரிழந்ததாக கூறினார் .
சம்பவத்துக்குப் பின், மனைவி அறைக்குள் பூட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார் என்று ராஜ்குமார் கூறியதால், முதலில் விபத்து மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல்வேறு முரண்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்தன.
அதிலும், தம்பதியின் 7 வயது மகள் தந்தையே கெரோசின் ஊற்றி தீ வைத்தார் என போலீசாரிடம் கூறிய சாட்சி வழக்கின் போக்கை மாற்றியது. மேலும், அப்பகுதியின் சிசிடிவி காட்சிகளில், சம்பவம் நடந்த நேரத்தில் ராஜ்குமார் வீட்டிலிருந்ததும் பின்னர் வெளியே சென்றதும் உறுதியான ஆதாரமாக கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 26 அன்று, போலீசார் வழக்கை மாற்றி கொலை வழக்கு பிரிவின் கீழ் பதிவு செய்து, ராஜ்குமார் சாஹுவை கைது செய்தனர். “இது தெளிவான குடும்ப வன்முறை சம்பவத்திலான கொலை வழக்கு. சந்தேகமே இல்லாமல் கொடூரமான செயல் இது” என்று போலீஸ் நிலைய ஆய்வாள தெரிவித்தார். குற்றவாளி தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு, மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.
