கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி வேம்பு அவன்யூ பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லக்ஷயா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினரின் மகள் யக்சிதா. அதே வீட்டில் ராஜேஷின் தாய் பிரேமா என்பவரும் வசித்து வந்தார். நேற்று இரவு ராஜேஷின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ராஜேஷ் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது தாய் பிரேமா, லக்ஷயா, யக்ஷிதா ஆகியோர் விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்ததும் தெரியவந்தது.

அவர்கள் இறந்து 2 நாட்களாகி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். பின்னர் 4 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடன் தொந்தரவு அதிகமாக இருந்ததால் ராஜேஷ் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.