விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் பெருமாள் சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் பாண்டிச்செல்வி (28). இவர் ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார். இவர் instagram-ல் குணசேகரன் (32) என்பவருடன் பழகி வந்துள்ளார். இவர்களுக்கு இடையே உள்ள பழக்கம் நாளடைவில் காதலாக மாறி செல்போனிலும் பேசி வந்ததோடு அடிக்கடி நேரிலும் சந்தித்து வந்துள்ளனர்.

இதற்கிடையில் இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டதால் பாண்டிச்செல்வி அவருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். ஆனால் குணசேகரன் தன்னை திருமணம் செய்து கொள்ளக் கூறி அவரை வற்புறுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக பாண்டிச்செல்வி ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை பாண்டிச்செல்வி தன்னுடைய அக்கா மற்றும் வேறு சிலருடன் வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குணசேகரன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பாண்டிச்செல்வியிடம் கூறியுள்ளார்.

அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் தன் பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை அவர் மீது ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய அக்கா கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்து பாண்டிச்செல்வியை மீட்டு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் அவருடைய அக்கா பாண்டீஸ்வரிக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அதோடு  வீட்டில் உள்ள சில பொருட்களும் எரிந்து சேதமாகியுள்ளது. இது தொடர்பாக ராஜபாளையம் தெற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள குணசேகரனை வலை வீசி தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.