
நீலகிரி மாவட்டம் பிதிர்காடு அருகே உள்ள சந்தகுன்னு என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜோய்(60) இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு ஜோய் பிதிர்காடு பஜாரில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.
அங்கு பொருட்களை வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும்போது வழியில் காட்டு யானை ஒன்று நின்று கொண்டிருந்தது.
அதனைப் பார்த்து பயந்து போன ஜோய் ஓட முயற்சித்த போது காட்டு யானை அவரை தாக்கியது. இதனால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு காட்டு யானையை விரட்டியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த ஜோயை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஜோய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் ஜோய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.