மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) மற்றும் பாஜக இடையே நிலவும் அரசியல் மோதல்களுக்கு மத்தியில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ அம்மாநில அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் தலைவர் ஒருவரை, ஒரு கும்பல் கட்டாயப்படுத்தி வெள்ளை நிறப் புடவையை உடுத்த வைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி அது வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

முன்னதாக, பாஜக தொண்டர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை மிரட்டுவதற்காக டிஎம்சி கட்சியினர் இத்தகைய குறியீட்டு முறைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இந்த வீடியோ ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தோ அல்லது அதில் இருக்கும் பெண்ணின் விபரங்கள் குறித்தோ இன்னும் அதிகாரப்பூர்வமான எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

வங்காள கலாச்சாரத்தில் வெள்ளை நிறப் புடவை என்பது மரணத்தைக் குறிக்கும் ஒரு குறியீடாகப் பார்க்கப்படுகிறது. கடந்த காலத் தேர்தல்களின் போது, அரசியல் எதிரிகளை அச்சுறுத்துவதற்காகவும், மறைமுகமாக மரண மிரட்டல் விடுப்பதற்காகவும் பாஜக தொண்டர்களின் வீடுகளுக்கு வெள்ளை நிறப் புடவைகள், மாலைகள் மற்றும் இறுதிச்சடங்கு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகப் பல புகார்கள் எழுந்துள்ளன.

இந்தச் சூழலில், தற்போது பரவி வரும் வீடியோ, மேற்கு வங்கத்தில் நிலவும் அரசியல் சகிப்புத்தன்மையற்ற போக்கை மீண்டும் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. இச்சம்பவம் குறித்து இருதரப்பு ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் காரசாரமாக விவாதித்து வரும் நிலையில், சிலர் இதனை விமர்சிதும், மற்ற சிலர் வீடியோவின் பின்னணி முழுமையாகத் தெரியாமல் எதையும் நம்ப வேண்டாம் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.