தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து நாயகனாக வலம் வந்தவர்தான் நடிகர் சரவணன். கார்த்தியுடன் இவர் நடித்த பருத்திவீரன் படம் திரையுலகில் மேலும் புகழை சேர்த்தது. நடிகர் சரவணன் சென்ற 2014-ம் வருடம் சென்னை மவுலிவாக்கத்தில் செண்பகராமன் என்பவரிடம் லேக் வியூ அடுக்கு மாடி குடியிருப்பில் 2 வீடுகளை வாங்கி உள்ளார்.

அந்த வீடுகளுக்கு சொந்தமான கார் பார்க்கிங்கும் 700-800 சதுரடி இருந்துள்ளது. இந்த இடத்தை அப்பகுதியிலுள்ள இராமமூர்த்தி என்பவர் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து கடை அமைத்து அதற்கு மின் இணைப்பு வாங்கிக்கொண்டதாகவும், அதற்குரிய வரியை செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த சரவணன் அந்த இடத்தை மீட்டு தரும்படி கடந்த 6 மாதங்களுக்கு முன் போரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்போது காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் தாமோ அன்பரசனிடம் தன் இடத்தை மீட்டு தரும்படி கோரிக்கை மனு அளித்தார் சரவணன். இம்மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

இந்தநிலையில் அமைச்சரின் உத்தரவை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆக்கிரமித்து கட்டப்பட்ட 2 கடைகளையும் காவல்துறையினர் பாதுகாப்புடன் திறந்து உள்ளே இருந்த பொருட்களை அப்புறப்படுத்தி கடை நடிகர் சரவணனுக்கு உரிமையானது என நோட்டீஸ் ஒட்டினர். இதனிடையே சரவணனின் முதல் மனைவியான சூர்யா ஸ்ரீ, சரவணன் மீது முதலமைச்சர் தனிப் பிரிவில் புகாரளித்துள்ளார். பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது சூர்யாஸ்ரீ கூறியதாவது “காதலித்து தன்னை திருமணம் செய்துகொண்ட சரவணன் சில வருடங்களுக்கு முன் மவுலிவாக்கத்தில் தான் சம்பாதித்த பணம் மற்றும் நகைகளை வைத்து வீடு வாங்கினார்.

வாங்கிய வீட்டை அவருடைய பெயரில் பதிவு செய்துகொண்டார். பட வாய்ப்பு இல்லாதபோது தன் சம்பாத்தியத்தில் சரவணன் உட்கார்ந்து சாப்பிட்டார். அதனை தொடர்ந்து சரவணன் பிக்பாஸ் சென்று வந்தபிறகு கையில் பணம் வந்ததும் ஸ்ரீதேவி என்ற பெண் உடன் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். கடந்த சில தினங்களாக சரவணன் 30 அடியாட்களுடன் தன் வீட்டிற்கு வந்து வீட்டை விட்டு வெளியேறும்படி ஆபாசமாக பேசி மிரட்டுகிறார். இவ்விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய நியாயத்தை பெற்று தரவேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.