ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருமாண்டிசெல்லிபாளையம் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 8 வயதுடைய ஜிஷ்ணு என்ற மகனும், 11 மாதமே ஆன ஆகாஷ் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த பத்தாம் தேதி டியூஷனுக்கு சென்ற ஜிஷ்ணுவை அழைத்து வருவதற்காக நாகமணி சென்றார். சதீஷ்குமார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஆகாஷ் எதிர்பாராதவிதமாக தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தான். இதற்கிடையே வீட்டிற்கு வந்த நாகமணி தனது மகன் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதார்.

உடனடியாக குழந்தையை பெருந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கி சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் ஆகாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து குழந்தையின் உடலை போலீசாருக்கு தெரியாமல் சுடுகாட்டில் குழி தோண்டி புதைத்து விட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் புதைக்கப்பட்ட ஆகாஷின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.