கேரள மாநில போக்குவரத்து கழகத்திற்கு (KSRTC) சொந்தமான பேருந்தில் பயணம் செய்த முதியவர் ஒருவர், தனக்கு அருகில் அமர்ந்திருந்த சிறுமியிடம் தவறான முறையில் நடந்துகொள்ள முயற்சி செய்துள்ளார். தனது முழங்கையை வைத்து அந்தச் சிறுமிக்குத் தொந்தரவு கொடுத்ததை, அங்கிருந்த மற்றொரு இளம்பெண் தனது செல்போனில் ரகசியமாகப் படம்பிடித்துள்ளார்.

தொடர்ந்து, அந்த இளம்பெண் இருக்கையை விட்டு எழுந்தபோது, அவரையும் அந்த முதியவர் அநாகரீகமாகத் தொட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், பேருந்திலேயே அந்த முதியவரைப் பளார் என அறைந்து சராமாரியாகத் திட்டினார்.

“உன் வயது என்ன? உன் செயல்கள் என்ன? இதோ என்னிடம் வீடியோ ஆதாரம் இருக்கிறது” என்று அந்தப் பெண் ஆவேசமாகப் பேசியதைக் கண்டு பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

தன்னை ஒரு யூடியூபர் மற்றும் கன்டென்ட் கிரியேட்டர் என அடையாளப்படுத்திக் கொண்ட அந்தப் பெண், இந்த அநாகரீகச் செயலை உலகிற்குத் தெரியப்படுத்துவேன் என்று எச்சரித்தார்.

முதலில் சமாளிக்க முயன்ற அந்த முதியவர், பின்னர் தனது தவறை உணர்ந்து கைகூப்பி மன்னிப்பு கேட்டுள்ளார். பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் இதுபோன்ற நபர்களுக்கு அந்த இளம்பெண் கொடுத்த பதிலடிக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.