லோகேஷ் கனகராஜ் தரப்பில் விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்..

வன்முறை காட்சிகள் நிறைந்த ‘லியோ’ படத்திற்கு தடை விதிக்க வேண்டும், படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட கோரிய வழக்கு இன்று இரண்டாவது முறையாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தரப்பில் மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து விரிவான பதில் அளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருக்கிறது.

மேலும்  மனுதாரர் தரப்பில் ‘லியோ’ படத்தில் எத்தனை வன்முறை காட்சிகளாக இருக்கிறது? இந்த வன்முறை காட்சிகள் எந்தெந்த இடத்தில் வருகிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பி அந்த காட்சிகள் குறித்த விவரங்களையும் பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். மதுரையை சேர்ந்த ராஜமுருகன் என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவில் தான் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியானது.

இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகள் வன்முறையை ஆதரிக்கும் வகையில் உள்ளது. மேலும் துப்பாக்கி, கத்தி, இரும்பு கம்பிகள், வீட்டிலேயே துப்பாக்கி தயாரிப்பது, வெடிபொருட்களை தயாரிப்பது, போதை பொருட்களை பயன்படுத்துவது உள்ளிட்ட வன்முறை காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த காட்சிகள் இளம் சிறார்களையும் இளைய தலைமுறையினரை  பாதிக்கும் வகையில் உள்ளது. இவ்வாறான லோகேஷ் கனகராஜின் படத்தை தணிக்கை துறையினர் முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜை உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகாததால் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஏற்கனவே எஸ் ஜே சூர்யாவின் நியூ படம் இது போன்ற காரணங்களால் தடை செய்யப்பட்டது என வாதத்தை எழுப்பினார். அப்போது லோகேஷ் கனகராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகை பாலன் என்பவர் இது விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு, இதில் எந்த முகாந்திரமும் இல்லை என தெரிவித்தார்.

இந்த நிலையில் தான் இந்த வழக்கில் வாதத்தின் போது குறுக்கிட்ட நீதிபதிகள் லியோ படத்தில் எத்தனை வன்முறை காட்சிகள் இருக்கிறது? எந்த இடத்தில் அந்த காட்சிகள் வருகிறது என கேள்வி எழுப்பினர். இதனை தொடர்ந்து மனுதாரர் தொடர்ந்த குற்றச்சாட்டு குறித்து லோகேஷ் கனகராஜ் தரப்பில் விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைத்துள்ளனர்..