மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டம் அசோக்நகர் பகுதியில், ஒரு அரசு ஊழியரான பட்வாரியை ஒரு பெண் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சம்பவம் இசாகர் தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, ஹைதர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி அஹிர்வார் என்பவர், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், தனது பெயரில் நிலத்தின் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும் எனப் பட்வாரி ராஜேஷிடம் கேட்டிருந்தார். இதற்காக அவர் ₹2,000 லஞ்சமாக வழங்கியதாகவும், பணத்தை பெற்ற பின்னும், அவர் தனது பணியை சரியாக செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

 

இது தொடர்பாக முதல்வர் உதவி எண் (CM Helpline) மூலமாக புகார் அளித்த லட்சுமி, பின்னர் தாலுகா அலுவலகத்தில் ராஜேஷை நேரில் சந்தித்தபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த நேரத்தில், ராஜேஷ் கைபேசியை பிடுங்கி, புகாரை  நீக்கியதாகக் கூறியதால் ஆத்திரமடைந்த லட்சுமி அவரை அறைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

சம்பவத்தின் வீடியோ  இணையத்தில் பரவலாக பரவி வருகிறது. இதற்குப் பிறகு, பட்வாரி ராஜேஷ் போலீசில் புகார் அளித்து, “தன்னை தாக்கியதோடு மட்டுமல்லாமல், பொய் வழக்குகளில் சிக்கவைக்கக் கூடுமெனஅந்த பெண்  மிரட்டியுள்ளார்” எனக் கூறியுள்ளார். அவரது புகாரின் அடிப்படையில், லட்சுமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார், “விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளனர். மேலும், லட்சுமி தனது புகாரை கலெக்டரிடம் நேரிலும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.