மத்திய பிரதேச மாநிலம் மொரேனா பகுதியில் நேர்ந்த பயங்கர சாலை விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். காரில் இருந்தவரின் அஜாக்கிரதையான செயல்பாடே இந்த கோர விபத்துக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. அதாவது சாலையில் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது காரில் இருந்த நபர், பின்னால் ஏதேனும் வாகனங்கள் வருகிறதா என்பதை கவனிக்காமல் திடீரென காரின் கதவைத் திறந்துள்ளார்.

அதே நேரத்தில், அந்த வழியாக மூன்று இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்  எதிர்பாராத விதமாக காரின் கதவு மீது பலமாக மோதியது. இதில் நிலைதடுமாறிய மூன்று இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டு சாலையின் நடுவே விழுந்தனர். இளைஞர்கள் சாலையில் விழுந்த அதே நொடியில், அவர்களுக்குப் பின்னால் அதிவேகமாக வந்த கன்டெய்னர் லாரி ஒன்று, சாலையில் விழுந்து கிடந்த இளைஞர்கள் மீது ஏறி இறங்கியது. லாரியின் சக்கரத்தில் சிக்கிய இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி கொடூரமாக உயிரிழந்தனர்.

 

உடன் பயணித்த மற்றொரு இளைஞர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பலியான இளைஞர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

பின்னால் வரும் வாகனங்களைக் கவனிக்காமல் அலட்சியமாக காரின் கதவைத் திறந்து, இரண்டு பேரின் உயிரிழப்புக்குக் காரணமான கார் ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.