மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில், சொத்துத் தகராறு காரணமாக வயதான முதியவர் ஒருவர் அவரது சொந்த மருமகள் மற்றும் பேரப்பிள்ளைகளால் நடுரோட்டில் வைத்து கொடூரமாகத் தாக்கப்பட்டு, தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும்  அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று  நடந்த இந்த மனிதாபிமானமற்ற கொடூரம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்பவர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது.

 

அந்த சிசிடிவி காட்சியில், முதியவரைச் சூழ்ந்துகொள்ளும் ஒரு கும்பல் அவரைத் தரையில் தள்ளி, காலால் உதைத்து, கொடூரமாகத் தாக்குவது தெளிவாகத் தெரிகிறது. தன்னை அடிக்க வேண்டாம் என்றும், விட்டுவிடுமாறும் கைகூப்பி அந்த முதியவர் கெஞ்சிய போதிலும், அந்த அரக்கக் குடும்பத்தினர் அவரைத் தொடர்ந்து தாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட முதியவர் தரப்பில் கூறும்போது, தன்னிடம் இருக்கும் சொத்தைக் வலுக்கட்டாயமாகப் பறிப்பதற்காகவே தனது மருமகளும் பேரப்பிள்ளைகளும் சேர்ந்து இந்த வெறித்தனமான தாக்குதலை நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தத் தாக்குதல் குறித்து முதலில்  காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், காயங்களுடன் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று அவர் நீதி கேட்டுள்ளார். இந்த சிசிடிவி காட்சி இணையத்தில் தீயாய் பரவி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து காவல்துறை அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.