குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை இன்று காஞ்சிபுரத்தில் முதலமைச்சர்  முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 2021 சட்டமன்ற தேர்தலின் போது  திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி, சுமார் 1 கோடியே 6 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது.

மகளிர் உரிமைத் தொகையை பெறும் பெண்களுக்காக, தமிழக அரசு சார்பில் பிரத்யேகமான ATM கார்டு வழங்கப்பட்டுள்ளது. அதனை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. அதன்படி, ATM பாஸ்வேர்ட் யாருடனும் பகிரக்கூடாது, தொலைபேசி அழைப்புகளில் ATM-ன் விவரங்களை தெரிவிக்கக் கூடாது, OTP போன்ற தகவலை கேட்கும் மோசடியாளர்களிடம் விழிப்புடன் இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.