ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியை சேர்ந்த ஜெக்பந்து சந்த் என்பவர் பழைய கார், பைக்குகளை மறு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி அர்ச்சனா நாக். இவர் அழகு நிலைய கலைஞராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கார், பைக் விற்பனை மூலமாக அர்ச்சனாவும், அவரது கணவரும் ஒடிசாவில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பிரபலமானவர்களுடன் அறிமுகமாகியுள்ளனர். அதன் பின் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு பெண்களை பாலியல் ரீதியிலான உறவுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த பிரபலங்கள் அந்த பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் அந்தரங்க காட்சிகளை அர்ச்சனாவும் அவரது கணவரும் சேர்ந்து ரகசியமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் கேட்ட பணத்தை தர வேண்டும் என மிரட்டியுள்ளனர். இவர்களது மிரட்டலுக்கு பயந்து அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்துள்ளனர். அந்த பணத்தை வைத்து அர்ச்சனா மற்றும் அவரது கணவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். இதற்கிடையே கடந்த வருடம் அர்ச்சனா மீது சினிமா தயாரிப்பாளர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆறாம் தேதி அர்ச்சனாவையும், அவரது கணவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணையின் போது அர்ச்சனாவின் வலையில் ஒடிசாவை சேர்ந்த அரசியல்வாதிகள் எம்.பி, எம்.எல்.ஏ க்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பணக்காரர்கள் உட்பட பல சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பண மோசடி என்ற காரணத்தினால் இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. மேலும் பண மோசடி வழக்கில் ஈடுபட்ட ராணி அர்ச்சனாவின் சொகுசு வீட்டை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. புவனேஸ்வரில் உள்ள 3.64 கோடி ரூபாய் மதிப்பிலான அர்ச்சனாவின் வீட்டை அமலாக்க துறையினர் கையகப்படுத்தியுள்ளனர்.