மும்பை ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரை திருநங்கைகள் எனக் கூறப்படும் சில நபர்கள் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘வராஹா வாரியர்’ என்ற பயனர் X தளத்தில் பதிவிட்ட இந்த காணொளியில், தாக்குதல் நடைபெறும் இடம், தேதி, சம்பந்தப்பட்டவர்கள் ஆகியவற்றின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

காணொளியில், ரயில் நிலைய மேடையில் உள்ள பெஞ்சில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை சுற்றி மூவர் நின்றுகொண்டிருப்பது தெரிகிறது. திடீரென, ஒருவர் தனது காலணியின் ஒரு பகுதியை கழற்றி, அந்த இளைஞரின் மீது கொடூரமாக அடிக்கிறார். அதிர்ச்சியடைந்த இளைஞர் எழுந்ததும், மேலும் அடிக்கின்றனர். இறுதியில், அவர் மேடையை கடந்துச் செல்லும் காட்சியுடன் காணொளி முடிவடைந்தது.

 

வீடியோவில் காணப்படும் இந்த நடத்தை மீது இணைய பயனர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பலரும், அருகில் இருந்த பொதுமக்கள் எவரும் தலையிடாததைக் குறித்து கேள்வி எழுப்பினர். வீடியோ பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ ஆதரவு பிரிவு ‘ரயில்வே சேவா’ இதைக் குறித்து பதிலளித்தது.

இத்தகைய சம்பவங்கள் ரயில்வே பயணிகளுக்காக வழங்கப்படும் பாதுகாப்பான சூழலை பிரதிபலிப்பதில்லை என்று தெரிவித்த அவர்கள், சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நிலையம், நேரம் உள்ளிட்ட விவரங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். ரயில்வே, வீடியோவின் உண்மைத்தன்மையைப் பரிசோதிக்க தேவையான தகவல்களை DM மூலமாகவும், ரயில்மட வாட்ஸ்அப் பாட் மூலமாகவும் அனுப்பச் சொல்லியுள்ளது.

மேலும் இந்த சம்பவம் எப்போது, எங்கு நடந்தது என்பது தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காணும் முயற்சி நடைபெறுகிறதா, அல்லது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதா என்பதும் தெளிவாக இல்லை.