கேரளாவில் சென்ற மாதம் ஆலப்புழையிலி ருந்து கண்ணூருக்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்டது. இந்நிலையில் உயிருக்கு பயந்து ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்த 3 பேர் இறந்தனர். இச்சம்பவம் குறித்து டெல்லியை சேர்ந்த ஷாருக் செய்பியை மராட்டிய ரத்தினகிரியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். இதில் கைதான ஷாருக் செய்பிக்கு சர்வதேச தீவிரவாத இயக்கத்தோடு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் படி என்.ஐ.ஏ.வும் விசாரணையை துவங்கியது.

இவ்வழக்கு குறித்த விவரங்களை மிகவும் ரகசியமாக வைக்கவேண்டும் என மத்திய உள்துறை உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் ஷாருக் செய்பி கைது செய்யப்பட்டது, அவரை காவல்துறையினர் கேரளாவுக்கு கொண்டு வருவது தொடர்பான விவரங்கள் உடனுக்குடன் வெளியானது. இப்படி ரகசிய விவரங்கள் வெளியானது தொடர்பாக விசாரணை நடத்த கேரள டிஜிபி அனில்காந்த் உத்தரவு பிறப்பித்தார்.

இதில் கேரள தீவிரவாத தடுப்புப்படை ஐஜியாக இருந்த விஜயன்தான் முக்கிய தகவல்கள் வெளியாக காரணம் என்பது தெரியவந்தது. அதன்பின் உடனடியாக ஐ.ஜி.விஜயன் அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் தீவைப்பு சம்பவம் பற்றி விசாரணை அதிகாரிகளை ஐ.ஜி.விஜயன் தொடர்புகொண்டதாக கூறப்படுகிறது. இவ்விவரம் டி.ஜி.பி. அனில்காந்துக்கு தெரியவந்ததை அடுத்து ஐ.ஜி. விஜயனை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.